50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு
திருவள்ளூர் நவ 20 : திருவள்ளூர் அருகே புட்லூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஊராட்சியின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஏரிகளிலும் அருகில் உள்ள ஆற்றிலும் கலந்து செல்கிறது இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் மாசு கட்டுப்பாடு வாரியத்திடமும் தொழிற்பேட்டை நிறுவனத்திடமும் பல்வேறு புகார்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் விவசாய நிலங்களில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் விவசாயமும் செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ரசாயன கழிவுகள் கலப்பதால் ஏரி நீர் பாதிக்கப்பட்டு அதில் வளர்க்கப்படும் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கதையாக உள்ளது.
இது தொடர்பாக புட்லூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தகவல் அளித்தும் இறந்த மீன்களை எடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏரி கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பதால் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.