அதியமான் கோட்டை அருகே திருமணமான இளம் பெண் மர்ம சாவு. கஞ்சா போதையில் கணவர் அடித்துக் கொன்றதாக தந்தை புகார். உறவினர்கள் சடலத்தை வாங்க மறுப்பு

Loading

தர்மபுரி,நவ.3:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தின்னஅள்ளி பூமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சவலூர் பகுதியைச் சேர்ந்த குண நந்தினி (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரவீன் குமார் கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. குண நந்தினி ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கஞ்சா போதையில் வந்த கணவர் குண நந்தினியிடம் வாக்குவாதம் செய்து எட்டி உதைத்ததன் காரணமாக கரு கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் குண நந்தினி தனது சவுலூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக பெரியோர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி குண நந்தினியை கணவர் பிரவீன் குமார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மீண்டும் தொடர்ந்து கஞ்சா போதையில் கணவர் தொந்தரவு செய்து வந்ததால் மீண்டும் கோபித்துக் கொண்டு குண நந்தினி அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் பெற்றோர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் நேற்று முன்தினம் குண நந்தினி கணவர் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர். மறுநாள் காலை தந்தை குணசேகரன் மகளை போனில் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தந்தை  உறவினர்களிடம் தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்க கூறியுள்ளார். அப்போது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது குண நந்தினியை நேரில் பார்க்க முடியவில்லை, வீட்டின் வெளியே இருந்த குண நந்தினியின் மாமியார் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகள் வீட்டிற்கு வந்து கெங்களாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குணநந்தினி சுயநினைவுடன் இல்லை என்றும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்தது குண நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் பிரவீன் குமார் தான் கஞ்சா போதையில் எனது மகளை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டு அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தன்னுடைய மகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த மகளின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதனால் சம்பவத்தில் இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் தருமபுரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *