மழையால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு
புதுவையில் பெய்த மழையினால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டது. கூட்டம் அலைமோதியது புதுவையில் தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளது. அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைகளில் துணிகள், பலகாரங்கள், பட்டாசுகள் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. நேரு வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, மிஷன் வீதி என வணிக நிறுவனங்கள அதிகமுள்ள வீதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் களை கட்டுகிறது.
விடுமுறை நாளான இன்று காலை பொருட்கள் வாங்க குடும்பம் குடும்பமாக மக்கள் கடை வீதிகளுக்கு படையெடுத்தனர். மழையால் அதிர்ச்சி சண்டே மார்க்கெட்டில் இயங்கும் கடைகள் கூட நேற்று திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனிடையே பிற்பகலில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு மிரட்டின.
அத்துடன் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்தனர். மக்களும் பொருட்கள் வாங்க வெளியே செல்வதா? வேண்டாமா? என்று யோசனையில் இருந்தனர். தெருவோரம் கடை போட்டுள்ளவர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தார்ப்பாய் போட்டு மூடி வைத்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் நிலையில் இன்றாவது மழை பொறுக்குமா? என்ற ஏக்கத்தில் வியாபாரிகள் உள்ளனர்.