கோவில் சொத்துகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை தொகை நிர்ணயம்: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்துக்கு குத்தகை தொகை நிர்ணயிப்பது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமஷ்ணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குத்தகை நிர்ணயம் நோட்டீசை எதிர்த்து பள்ளி நிர்வாகம் அளித்துள்ள ஆட்சேபனைகளை 8 வாரத்துக்குள் அறநிலையத்துறை ஆணையர் பரிசீலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகள் குத்தகைக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை தொகையை மாற்றியமைத்து நிர்ணயம் செய்யும் நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.