புதிய படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே?
![]()
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் விடுபட்ட சில காட்சிகளை சென்னையில் நடந்த 2 நாள் படப்பிடிப்பில் ரஜினி முடித்து கொடுத்துவிட்டார். நாளை (25-ந் தேதி) முதல் டப்பிங் பேசுகிறார். அண்ணாத்த தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றி படத்தை இயக்கி பிரபலமான தேசிங்கு பெரியசாமியை ஏற்கனவே ரஜினி அழைத்து பாராட்டினார். அப்போது தனக்கு கதை இருந்தால் சொல்லும்படி ரஜினி கேட்க தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை பிடித்துபோய் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. தீபிகா படுகோனே ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ராணா சரித்திர படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் ரஜினிக்கு உடல்நலம் குன்றியதால் அந்த படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு ரஜினியுடன் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார்.

