திருவள்ளூர் மக்கள்குறை 390 கோரிக்கை மனு
![]()
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் 390 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் டிச 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. வருவாய் அலுவலர் சு.சுரேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 390 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 122 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 15 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி45 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 152 மனுக்களும் என மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ் அறிவுறுத்தினார்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சுரேஷ் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர வண்டியையும்,குமார் என்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு ரூ.550 மதிப்புள்ள முழங்கை ஊன்றுக்கோல் ஆகியவற்றை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

