நிரந்தர கருத்தடை சிகிச்சைதொடர்பான விழிப்புணர்வு
![]()
திருவள்ளூரில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரத பேரணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குடுப்நலச்செயலகம் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு இரத பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிறப்பு முகாம்கள் 2025 நவம்பர் 21 முதல் 2025 டிசம்பர் 04 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இருவார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்பநல துறையின் மூலம் தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இம்முறையின் சிறப்பம்சங்கள்: பெண்களுக்கான குடும்பநல கருத்தடை செய்வதைவிட எளிமையானது மயக்கமருந்து கொடுப்பதில்லை. கத்தியின்றி இரத்தமின்றி செய்யப்படுகிறது. தையல் இல்லாததால் தழும்பு தெரியாது மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம். இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொண்டு குடும்ப நல கருத்தடை முறை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஈட்டுத்தொகையாக அரசால் வழங்கப்படும் ரூபாய் 1100 வழங்கப்படும். இச்சிறப்பு முகாமில் குடும்ப நலம் ஏற்கும் ஆண்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.3900/- சேர்த்து ரூ.5000 வழங்கப்படும். மேலும் ஊக்குவிப்பாளருக்கு ரூ.200 வழங்கப்படும். இதனை தகுதியுள்ள தந்தையர்கள் ஏற்பதன் மூலம் சிறு குடும்ப நெறியை பின்பற்றலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இப்பேரணியில், இணை இயக்குநர் (மருத்துவம் ம ஊரக நலப்பணிகள்) அன்பிகா சண்முகம், துணை இயக்குநர் (குடும்ப நலம்) சேகர், துணை இயக்குநர் (காசநோய்கள்) சங்கீதா, மாவட்ட விரிவாக்க அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

