5-வது நாளாக தொடரும் தடை..குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
குற்றாலம் அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் கொட்டியதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் குற்றாலத்தில் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர். நீர்வரத்து குறையும் பட்சதத்தில் அனைத்து அருவிகளிலும் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.