கரூர் கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணம்.. சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Loading

“இதுதான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்விளக்கம் அளித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்தநிலையில் தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது.
அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. அரசின் நடவடிக்கைகள், எதிர்கால ‌ நடவடிக்கைகள் குறித்து ‌‌விளக்கம் அளிக்கிறேன்.

கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர்.

அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது.

கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது. சுப்ரீம்கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

0Shares