தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி.. அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!
திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 395 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 395 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 123 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 51 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 45 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 75 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 101 மனுக்களும் என மொத்தம் 395 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.