கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி..பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு,அரசு உதவிபெறும்,தனியார் (பதின்ம) மேல்நிலைப் பள்ளிகளில் 11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 14.10.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என வழங்கப் பெறவுள்ளன.

11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 14.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் திருவள்ளூரில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவு செய்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனுப்பவேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15.10.2025 புதன்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளன. பேச்சுப் போட்டிகள் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு 3 பேர் வீதம் தெரிவுசெய்து அனுப்பவேண்டும். தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares