பேச்சுவார்த்தை தோல்வி: 4-வது நாளாக தொடரும் போராட்டம்!
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே ஆயில் நிறுவன அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலமாக சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 3 ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இந்நிலையில் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை ஆயில் நிறுவன அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடருகிறது. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் உடன்பாடு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.