திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் அக் 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.அதன்படி வடசென்னை,கோயம்புத்தூர்,சேலம்,நாமக்கல்,கடலூர்,கரூர்,பெரம்பலூர்,திண்டுக்கல்,புதுக்கோட்டை,நாகர்கோவில்,அம்பத்தூர்,செங்கல்பட்டு,ஓசூர், ஈரோடு,திருச்சி,உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர்,மதுரை,தேனி, விருதுநகர், தூத்துக்குடி,வேலூர்,திருவண்ணாமலை,குன்னூர்,அரியலூர்,நீடாமங்கலம், நாகப்பட்டினம்,இராமநாதபுரம்,திருநெல்வேலி,சிவகங்கை,திருப்பூர்,தர்மபுரி,திண்டிவனம்,இராணிப்பேட்டை,தென்காசி ஆகிய மையங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அம்பத்தூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசித் தேதி17.10.2025 ஆகும். மேலும் விவரங்களுக்கு 044 26252453 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.