ஒரு மணி நேரம் ஆலோசனை.. எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் பேசியது என்ன?
திடீர்னு வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி?. விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தமிழகம்,புதுவையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் திமுக, அதிமுக போன்ற பல வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருடன் தமிழ்நாடு பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனனும் உடனிருந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினேன். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. அதிமுக ஒன்றிணைப்பு குறித்து காலம்தான் பதில் சொல்லும்.
விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். தேர்தல் வர வேண்டும். நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். மக்கள் ஓட்டு போட வேண்டும்; அதற்கு பிறகுதான் சொல்ல முடியுமே தவிர ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. திடீர்னு வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி?. விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது.இவ்வாறு அவர் கூறினார்.பாமக உட்கட்சி பிரச்னை தொடர்பான கேள்விக்கு எந்த உட்கட்சி பிரச்னையிலும் பாஜக தலையிடாது” என்று தெரிவித்தார்.