முதல் பெண் ரெயில் ஓட்டுநர்..இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பணி ஓய்வு!
இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்தப்பின் ரெயில்வேயில் 1,500 பெண் ரெயில் ஓட்டுநர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார். மராட்டிய மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ். விவசாய குடும்பத்தில் பிறந்த சுரேகா யாதவ் 1989ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து 1996ம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநராக சுரேகா பணியாற்றினார். பின்னர், 2000ம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில் ஓட்டுநராக அவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.அவரது பணியின் இறுதியாக மராட்டியத்தின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹச்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்தப்பின் ரெயில்வேயில் 1,500 பெண் ரெயில் ஓட்டுநர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது . சுரேகாவின் பணி பிற பெண்களும் ரெயில்வேயில் ஓட்டுநராக சேர உந்து சக்தியாக திகழ்ந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் சுரேகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.