அரசு பொதுமருத்துவமனையின் அவலநிலை..நேரு MLA கண்டனம்!
சிறுநீரக கல்லை அகற்றும் ESWL என்ற கருவியை புதிதாக தருவித்து அரசு பொதுமருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சுகாதாரத்துறையை நேரு(எ)குப்புசாமி MLA வலிறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அவர்களுக்கு திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி நகரப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பல நோய் தாக்கங்களுக்கு உள்ளாகிறார்கள். அதில் குறிப்பாக சிறுநீரக கோளாறால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு கிட்னி செயலிழப்புக்கு உள்ளாகிறார்கள். அதேநேரத்தில் சிறுநீரகத்தில் ஏற்படும் சிறுநீரக கற்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் அதிகம் பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
தற்போது இந்த சிகிச்சைக்கான முக்கிய கருவியான ESWL என்ற சிறுநீரக கல் அகற்றும் கருவி பழுதாகி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் வலியால் துடித்து அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இப்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் வலியால் அவதிப்படும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற ஏறக்குறைய (30,000-) முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது.
ஏழை, எளிய மக்கள் இந்த சிகிச்சைக்கு கடன்பெற்று பணம் கட்ட நேரிடுவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு சிறுநீரக கல்லை அகற்றும் ESWL என்ற கருவியை புதிதாக தருவித்து அரசு பொதுமருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
மேற்கண்ட இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் திரு. செவ்வேள் அவர்கள், சுகாதாரத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு அங்கு மருத்துவ கண்காணிப்பாளர் பதவி காலியாக இருப்பதால் மேற்கண்ட மருத்துவமனையில் நிர்வாக குறைப்பாடு அதிக அளவில் காணப்படுகிறது. இதனை தங்கள் மேலான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்வதுடன்
இதற்கான தீர்வை துரிதமாக முன்னேடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிG.நேரு(எ)குப்புசாமி MLA வலியுறுத்தியுள்ளார்.