போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.. தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சண்முகையாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா (வயது 36) என்பவரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் “Cr.No.10/2019 u/s. 5(l), (j), (ii) r/w 6 of pocso Act and 450, 506(i) IPC” ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி சண்முகையா என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் , விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.