நாளை முதல் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!
டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நாளை முதல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 ல் 50 காலிப்பணியிடங்களும் குரூப் – 2ஏ-ல் 595 காலிப்பணியிடங்களும் அறிவிப்பு 15.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள். 20.08.2025 ஆகும். டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 / 2ஏ முதன்மை தேர்வுக்காகன கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 28.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர்; மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் விண்ணப்பத்துடன் இணைத்து திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.