பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பாலகிருஷ்ணன்.50 வயதான இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பள்ளியில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர், அதனை தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தன் பேரில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, வட்டார கல்வி அலுவலர் சுதா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது .
இந்தநிலையில் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் மீது ஏற்கனவே போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது உள்பட பல்வேறு புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.