தங்கம் கடத்தல் வழக்கு..நடிகை ரன்யா ராவ் தாய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!
நடிகை ரன்யா ராவ் மீதான காபி போசா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குக்கு தடை கோரி, அவரது தாய் ரோகிணி தொடர்ந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் .32 வயதான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கநகையை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் அவர் 10-க்கும் மேற்பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், அங்கிருந்து வரும்போதெல்லாம் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பெங்களூரில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை நடத்திரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இன்னும் ஒரு ஆண்டு ஜாமீன் கிடைக்காததால், சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் ரன்யா ராவ் மீதான காபி போசா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குக்கு தடை கோரி, அவரது தாய் ரோகிணி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று வக்கீல் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.