திருமாவளவன் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவிற்கு தேவையில்லை..புதுச்சேரி அதிமுக கடும் தாக்கு!
திமுக கூட்டணியில் அட்டவணை பிரிவினர்களின் உரிமைகளை தங்களது கட்சி மூலம் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவிற்கு தேவையில்லை என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் கூறியதாவது:பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக அழிந்து விடும் என திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் கருத்து தெரிவித்திருப்பது சந்தர்ப்பவாதம் செயலாகும்.
அதிமுக மீது உண்மையில் திருமாவளவனுக்கு அக்கறையும், பாசமும் இருக்குமேயானால் அவர் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். திமுக கூட்டணியில் விழும் வாக்கு நான்கில் ஒரு வாக்கும், அதே போன்று 25 சதவீத வாக்குகள் விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் என திருமாவளவன் அவர்கள் நேற்று முன்தினம் கூறியதை இதுனால் வரை திமுகவும் திமுகவின் எந்த ஒரு கூட்டணி கட்சியும் மறுக்கவில்லை.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 இடங்களில் 25 சதவீத இடங்களை அதாவது சுமார் 58 இடங்களை வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக திருமாவளவன் அவர்கள் பெற்றால் உண்மையில் அதிமுக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும்.
புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெறுதல் மற்றும் மாநில அந்தஸ்து வழங்குதல் இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மற்றும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி இருந்த போதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க காங்கிரஸ் கட்சி முன்வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இந்தியாவில் காஷ்மீர், லடாக் என்ற இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களை உருவாக்கினர். தற்போது காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் கார்கே ஆகியோர் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க பாராளுமன்றத்தில் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை பலமுறை ஆட்சிக்கட்டில் அமர வைத்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் தற்போது தலைவர் கார்கே ஆகிய இருவரும் பிரதமரை வலியுறுத்தாதது அவர்களின் சந்தர்ப்பவாத அரசிலை காட்டுகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியின் மாநில அந்தஸ்து பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த தலைவர் பற்றி யார் விமர்சனம் செய்தாலும் தவறான ஒன்று. அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவது தவறு. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மிக நெருக்கமானவரான பாராளுமன்ற உறுப்பினர் சிவா அவர்கள் மறைந்த காமராஜர் பற்றி தரக்குறைவான கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த முறை கூட்டணியில் பாஜக இருந்த போது பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி தவறாக பேசியதால் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் போதே பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஆன்மையுடன் அறிவித்தவர் எடப்பாடியார்.
ஆனால் இன்று திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசார் வெளியேற தயாரா.? காமராஜர் பற்றி தவறாக பேசியது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் காமராஜரை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.
எந்த தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்களோ அந்த தலைவரை பற்றி மாற்று கட்சியினர் தவறாக பேசியதை அவர்களை எதிர்த்து கூட பேசாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் நாராயணசாமி, தவைத்திலிங்கம் இருவரும் உள்ளனர். திமுகவை கண்டித்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பு நமக்கு ஏற்படும் என வாய்மூடி மவுனம் காக்கின்றனர். அற்ப வாக்கு வங்கிக்காக பெருந்தலைவர் காமராஜரை விசாரித்த திமுகவை கண்டிக்க கூட திராணியற்ற கட்சியாக புதுச்சேரி காங்கிரஸ் உள்ளது. வரும் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக வேட்பாளர்களுக்கு சரியான தண்டனையை வழங்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறாக பேசிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் சிவாவின் கருத்து அனைத்தையும் அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.எடப்பாடியார் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரியில் வருகை தந்த போது அவருக்கு பாஜக தலைவர்களும், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததற்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகிய இவ்விரண்டு கட்சியினருக்கும் அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என அதிமுக மாநில செயலாளர்அன்பழகன் கூறியுள்ளார்.