ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகள்..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு,சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் 2024-2025 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆவடி பேருந்து நிலையத்தினை மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பேருந்து நிலையம் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.90 Acres நிலப்பரப்பில், 64,700 சதுர அடியில் நிர்வாக கட்டிடம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களுடன் கட்டப்படவுள்ளது.
நிர்வாகக் கட்டிடத்தில் பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வசதிக்காக உணவகம், 9 கடைகள், பேருந்து நிலைய பணியாளர்களுக்கு ஓய்வு எடுக்கும் அறைகளும், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிக்காக தண்ணீர் சுத்தகரிப்பு நிலையம் நிறுவப்படவுள்ளன. இவற்றுடன், 10 நான்கு சக்கர வாகனம் மற்றும் 435 இரண்டு சக்கர வாகன நிறுத்தம், 10 மாநகர பேருந்து நிறுத்தம், 12 ஓய்வுநிலை பேருந்து நிறுத்தும் வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
இப்பேருந்து நிலையம் கட்டுவதன் மூலமாக பயணிகள், சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று வர மிகவும் பயனுள்ளதாக அமையும். இப்பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடி பேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ்,முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் த.பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மண்டலக் குழு தலைவர்கள் ராஜேந்திரன், அம்மு, ஜோதிலட்சுமி, தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி , தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்புப் பொறியாளர் ராஜா மகேஷ் குமார், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.