ஹைடிசைன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை!
![]()
கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஹைடிசைன் தொழிலாளர்களுடன்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுச்சேரி ஒதியம்பட்டில் இயங்கி வரும் ஹைடிசைன் தொழிற்சாலையில் பணிபுரியும் எல்பிஎப் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வருடாந்திர பண்டிகை போனஸ், போக்குவரத்துப்படி, பஞ்சப்படி, கேண்டீன் அலவன்ஸ், சிஎல் விடுமுறை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிற்சாலை நிர்வாகத்திடம் வழங்கி, கோரிக்கைகள் அனைத்தும் ஒருவார காலத்திற்குள் தீர்க்க வேண்டும். அதுவரை தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணி செய்வார்கள். நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டினால் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த நேரிடும் என்றும் எச்சரித்தார். பின்னர் நிர்வாகம் தரப்பில் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த சந்திப்பின்போது, ஹைடிசைன் தொழிற்சாலை பொது மேலாளர் சிவதாசன், மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஆனந்து, எல்பிஎப் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அமுதா, லட்சுமி, கல்பனா, அமுதவல்லி, புண்ணியகோடி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், கிளைக் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், ஜனா, மந்திரி குமார், மிலிட்டரி முருகன், அன்பு நிதி, ஜிப்மர் செல்வம், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

