திருமணம் ஆன 4-வது நாளில் உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண்..நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி என்பவருக்கும் வாலிபர் பன்னீர் என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 27-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த நிலையில் புது பெண் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இந்தநிலையில் இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.இதையடுத்து கணவர் பன்னீர் , மாமியார் பூங்கோதை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.திருமணமான 4 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.