பதிவுத்துறைக்கு நன்றி பாராட்டி பெயிரா கடிதம்.!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பத்திர பதிவு நடைபெற்ற நாளன்றே கைப்பேசி வாயிலாக வில்லங்கச் சான்று வழங்கும் வசதியை பாராட்டி தமிழ்நாடு பதிவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. மேற்கண்ட வகையில் பதிவுத்துறையில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் எளிதில் விரைந்து கிடைத்திடும் வகையில் காலத்திற்கேற்ப அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பத்திர பதிவு நடைபெற்ற தினத்தன்றே சம்பந்தப்பட்ட நபருக்கான வில்லங்கச் சான்றை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணில் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பப்படும் இணைப்பின் (Link) மூலம் வழங்கிடும் வகையில் பதிவுத்துறை நடைமுறைப்படுத்தியுள்ள இத்திட்டமானது பொது மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
பதிவுத்துறை தமிழ்நாடு முழுவதும் 11 மண்டல அலுவலகங்கள், 56 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 582 சார் பதிவாளர் அலுவலகங்களென இயங்கி வருகின்றது. மேற்கண்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. பதிவுத்துறை பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளையும் எளிதாகவும், விரைவாகவும் தற்போது ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக வழங்கி வருவதுடன், பத்திர பதிவு பணிகள் நிறைவடைந்த தினத்தன்றே சொத்து குறித்த கள ஆய்வு தேவைப்படும் பத்திரங்களை தவிர்த்து, மற்றனைத்து பத்திரங்களையும் அதே நாளில் வழங்கிட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
பதிவுத்துறையின் பணிகள் தற்போது ஸ்டார் 2.0 மென்பொருள் வாயிலாக விரைந்து நிறைவடைந்தாலும், சம்பந்தப்பட்ட நபர் தனது சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்கச் சான்றினை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய பதிவுத்துறையின் இணையத்தில் பல கட்டங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி தேவையான தகவல்களை பூர்த்தி செய்து பெற வேண்டியதின் காரணமாக பாமர மற்றும் சாமானிய மக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தங்களுக்கான சொத்து பரிமாற்றங்கள் குறித்த வில்லங்கச் சான்றினை பிறர் உதவியின்றி பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்யயிலாத சூழல் நிலவி வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் பதிவுத்துறை சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள இத்திட்டத்தின்படி பத்திர பதிவு நடைபெற்ற தினத்தன்றே சம்பந்தப்பட்ட நபரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் (Link) வாயிலாக சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றினை இலவசமாக பெற முடியும். மேலும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் இணைப்பு (Link) 30 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டடுள்ளதன் காரணமாக இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கான திட்ட அனுமதி, சொத்து வரி, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பிற்கான பெயர் மாற்றங்களை மேற்கொள்வதற்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை பெயிரா கூட்டமைப்பு மனம் திறந்து பாராட்டி வரவேற்பதுடன், கூடுதல் கோரிக்கையாக வில்லங்கச் சான்றில் சமீப காலங்களில் நடைபெற்ற சொத்து பரிமாற்றம் சம்பந்தமான விபரங்கள் மட்டுமல்லாமல், கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்ட காலம் முதல் தற்போது வரையுள்ள குறிப்பிட்ட சொத்து சம்பந்தப்பட்ட பரிமாற்றங்கள் அனைத்தும் இடம் பெறும் வகையில் வழிவகை செய்திட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்து பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.