பாதாள சாக்கடை பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்..முன்னாள் MLA ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!

Loading

காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சிக்னல் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுக்கு வராததால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகி, மக்கள் அன்றாடம் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் முதல் ராஜீவ் காந்தி சிலை வரையிலான பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்நேரம் வரை அந்த பணிகள் முழுமையாக நிறைவடையாதது மிகவும் வருத்தக்குறியதாகவும், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதற்கான முக்கிய காரணமாகவும் உள்ளது.

இச்சாலை, தினமும் முதல்வர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பெருமளவில் பயணிக்கும் முக்கிய சாலையாக இருந்தும், அதன் நிலைமை மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

பணிகள் துவங்கிய கட்டத்திலேயே பணிகளில் தோல்வி ஏற்படுவதை கண்டு நான் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தலைமை பொறியாளருக்கும் மனு அளித்தேன். அதன் தொடர்ச்சியாக, ராஜா தியேட்டர் முதல் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பணிகள் முடிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

ஆனால், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ராஜீவ் காந்தி சிலை வரையிலான இடதுபுற சாலை பகுதியில் பணிகள் முடிக்கப்படாமலும், தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமலும் இருப்பது காரணமாக, அந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடையும் நிலை உருவாகியுள்ளது.

சாதாரணமாகவே காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் தொடரும் நிலையில் உள்ளது. இப்போது பாதாள சாக்கடை பணிகள் முடிவுக்கு வராததால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகி, மக்கள் அன்றாடம் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் ராஜீவ் காந்தி சிலை வரை பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். அந்தப் பகுதியில் நிலவுகின்ற பள்ளங்களை மூடிச் சாலை முழுவதுமாக செப்பனிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

0Shares