வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கு பெயிரா கடிதம்.!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழகத்தில் ஏல சொத்துக்களின் விற்பனை சான்றிதழ் பதிவு கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கு நன்றி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களின் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களது சொத்துக்களை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அடமானமாக வைத்து கடனாக பணம் பெறுகின்றனர். இப்படி மேற்கண்ட வகையில் கடனாக பெற்ற பணத்திற்கான வட்டி மற்றும் முழுத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் ஏலத்தில் விடப்படுகின்றன.
மேற்கண்ட வகையில் ஏலத்தின் வாயிலாக சொத்துக்களை வாங்கியவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் விற்பனைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இப்படி வழங்கப்படும் விற்பனை சான்றிதழ்களை பதிவுத்துறை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக 7% மற்றும் பதிவு கட்டணமாக 4% என்கின்ற வகையில் கட்டணம் பெறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2023-ல் வழக்கமான சொத்து விற்பனை பத்திரங்களுக்கான பதிவு கட்டணத்தை 4%இலிருந்து 2% ஆகக் குறைத்து நடைமுறைப்படுத்தியது. அதேசமயம் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் நடத்திய ஏலத்தின் வாயிலாக வாங்கப்பட்ட சொத்து சம்பந்தமாக வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் முன்பிருந்த நிலையே அதாவது பதிவு கட்டணம் 4% என்கின்ற வகையிலே தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசு வழக்கமான சொத்து விற்பனை பத்திரங்களுக்கான பதிவு கட்டணத்தை 4%இலிருந்து 2% ஆகக் குறைத்து நடைமுறைப்படுத்தியதை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பாராட்டி வரவேற்றும், அதேபோன்று வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு செய்வதற்கான கட்டணத்தையும் 4%இலிருந்து 2% ஆகக் குறைத்திட வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கையாக முன் வைத்தோம்.
பெயிரா கூட்டமைப்பின் மேற்கண்ட கோரிக்கையினை தமிழ்நாடு அரசு கனிவோடு பரிசீலித்து தமிழகத்தில் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழ் பதிவு தொடர்பாக 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் (1908 ஆம் ஆண்டின் மத்திய சட்டம் 16) பிரிவு 78 இன் கீழ் கட்டண அட்டவணையில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை ஏலத்தில் விடப்பட்ட சொத்துக்களின் விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை 4% இலிருந்து 2% ஆகக் குறைத்து அரசாணை (அரசாணை எண்:087, நாள்:13.06.2025) ஆக வெளியிட்டு வழிவகை செய்தமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், உயர்திரு செயலாளர் மற்றும் உயர்திரு பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட பதிவுத்துறைக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.