திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.!
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலையில் விநாயகர் வழிபாடு வேள்வி, மாலையில் எண் திசைத் தேவர்கள் வழிபாடு திசா சாந்தி வேள்வி நடந்தது. இன்று காலையில் நவக்கிரக வேள்வி, மாலையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி தேவதை வழிபாடு நடக்கிறது.
வருகிற 1-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 12 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 இடங்களில் பிரம்மாண்டமான வகையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில் அலங்காரத்துடன் யாககுண்டம் அமைந்துள்ள பகுதிகள் தங்கநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) மதியத்தில் இருந்து மறுநாள் 7-ந் தேதி மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு செய்தார். வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் நடைபாதைக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் உள்ளிட்டவற்றை கனிமொழி ஆய்வு செய்தார்.
அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.