கல்வியை மேம்படுத்தி உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.. காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி பேச்சு!
கல்வியை மேம்படுத்தி உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார்.
கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவில்பட்டி இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த கல்வியே அழியாத செல்வம் எனும் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார்.எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன், வேளாண்மை துறை முன்னாள் இணை இயக்குனர் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றார்.
தமிழக காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது.தொழில் மற்றும் நர்சிங் கல்வி பயிலும் மாணவர்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் கற்ற கல்வியை தொடர்ந்து அறிவை மேம்படுத்தி சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.நிறுவனங்களில் படிப்பது மட்டும் கல்வி அல்ல,தொடர்ந்து தான் செய்கின்ற தொழிலை பற்றி மேலும் தெரிந்து கொள்வதும் தான் கல்வி.ஒருவர் கல்வி கற்றால் ஏழு தலைமுறைக்கும் உறுதுணையாக இருக்கும்,எத்தனை தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தற்கு ஈடாகாது. பாரதியின் வரிகளையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.
இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நர்சிங் கல்லூரி ஆசிரியை பூபதி நன்றி கூறினார்.