பருத்திக்கு உரிய விலை கேட்டு அதிமுகஆர்ப்பாட்டம்..எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் உரிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் .
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பருத்தி பஞ்சு கிலோவுக்கு ரூ.46 முதல் ரூ.53 வரை மட்டுமே ஏலம் போவதாக கூறப்படுகிறது, இதனால் உற்பத்திச் செலவையும் மீட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.75 என நிர்ணயிக்க வேண்டும்.வெளியூர் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.உள்ளூர் இடைத்தரகர்கள் சிண்டிகேட் மூலம் விலையை கட்டுப்படுத்துவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் உரிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 1ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவாரூர் ரெயில் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களைச் சார்ந்த விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகள் பருத்தி பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கோடைக்கால பருத்தி சாகுபடியில் விவசாயிகள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது, பருத்தி விலை சரிந்து விவசாயிகள் மீண்டும் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயிகளை புறக்கணிக்கிறது.வெளியூர் வியாபாரிகள் பங்கேற்கத் தேவையான நடவடிக்கைகள் இல்லை.பாரதிய ஜனதா அரசு ஒரே ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் .
.