மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி,ஏந்தி ஊர்வலம் நடத்திய கிராமமக்கள்!
பாகூர் பகுதியில் தொடரும் மின்வெட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் மெழுகுவர்த்தி,ஏந்தி நடைபெற்ற ஊர்வலத்தில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 40 நாட்களாக அறிவிக்கப்படாத முறையில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை கண்டித்து, மின்வெட்டை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகள் சார்பில் பாகூர் மணி கூண்டு அருகே இன்று மெழுகுவர்த்தி மற்றும் ராந்தல் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில பொருளாளர் மற்றும் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.செந்தில் குமார்,MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மின்துறையின் மீது தன் கண்டனத்தை பதிவு செய்தார்.
முக்கிய வீதிகளில் நடைபெற்ற ஊர்வலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பகலும் இரவும் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தாமதமின்றி சரிசெய்ய புதுவை மின்துறையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.