ஆன்லைன் வர்த்தக மோசடி.. லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பொதுமக்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் தற்போது வரை ₹15 கோடி வரை மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், குடும்ப வாழ்க்கையை சீராக நடத்த வருமானத்தை இரட்டிப்பு செய்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஆர்வம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. அரசு அல்லது தனியார் வேலை பார்த்துக்கொண்டே கூடுதல் வருமானம் பெறலாம் என எண்ணி, பலர் இணையதள வர்த்தகத்துக்கு குதித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆசை பலருக்கு ஆபத்தான மோசடியாக மாறி வருகிறது.
முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில்,“திறமையானவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். பயிற்சி இலவசம். தொடர்புக்கு வாட்ஸ்அப் செய்யவும்”எனும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வைரலாக பரவுகின்றன.
இதில் சிக்கிய பலர், முதலீடு செய்வதற்காக தரப்பட்ட வங்கி கணக்கில் முதலில் ₹1,000 செலுத்துகிறார்கள். சில நாட்களில் ₹1,200 திரும்ப வர, நம்பிக்கை உருவாகி, பணத்தை உயர்த்தி ₹1 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை முதலீடு செய்கிறார்கள். பின்னர் அந்த தொகைகள் திரும்ப வராமல் போகின்றன. தொடர்ந்து கேட்கும் போது, “மேலும் முதலீடு செய்தால்தான் பணம் வரும்” என்று வாட்ஸ்அப்பில் பதிலளிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை ₹15 கோடி வரை மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.100-க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன.மோசடியில் சிக்கியவர்கள்: பட்டதாரிகள், இன்ஜினீயர்கள், ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல தரப்பினரும் உள்ளனர்.
குறைந்தபட்சம் ₹20,000 முதல் ₹50 லட்சம் வரை பண இழப்புகள் பதிவாகியுள்ளன.
சைபர் கிரைம் எச்சரிக்கை:
சில மோசடிக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டும், பணத்தை மீட்டெடுப்பது மிகக்கடினமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். விரைவில் பணம் வருமானம் பெறும் என்ற ஆசையில் மக்கள் தங்கள் செலுத்திய சேமிப்பை முழுமையாக இழந்து, காவல் நிலையங்களை நாடும் நிலை ஏற்படுகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் பரிந்துரைகள்:
அதிகாரபூர்வ ஆதாரம் இல்லாத விளம்பரங்களை நம்பவேண்டாம் யாரும் வாட்ஸ்அப் மூலம் தொழில் வாய்ப்பு வழங்கமாட்டார்கள்,சரிபாராத வங்கி கணக்குகளில் பணம் அனுப்ப வேண்டாம் சட்டவிரோதமாக இருக்க வாய்ப்பு,உங்களுக்கு ஏற்கனவே சம்பாதிப்பு தருகிறதென கூறும் “சான்றுகள்” புகைப்படங்களை நம்ப வேண்டாம்,அவை அனைத்தும் அமைக்கப்பட்டவை இருக்கலாம்,பங்குச் சந்தை, வர்த்தகம் போன்றவற்றில் முதலீடு செய்யும் முன் SEBI அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை அணுக வேண்டும் மோசடிக்கு உள்ளானால் உடனே www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும் இவ்வாறு, ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.