அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இணைந்து சர்வதேச கைம்பெண்கள் தின விழாவை முன்னிட்டு பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் அரசு நல திட்டங்களையும் சேவைகளையும் பெறுதல் குறித்த கருத்தரங்கம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய துணை இயக்குனர் கே .விஜயா தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி உரை ஆற்றினார்.ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். பூங்கொடி வரவேற்றார். ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் பி. ஸ்டீபன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசுகையில், பூண்டி மற்றும் எல்லாபுரம் ஒன்றியங்களில் 63 பஞ்சாயத்துகளில் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் தேவைகளை கண்டறிந்து அரசு துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களது வாழ்வாதார முன்னேற்றம் உறுதி செய்யப்படும் பொழுது இவர்களுடைய குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவைகளை உறுதி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கே. விஜயா பேசுகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலம் போட்டி தேர்வு எழுதுவதற்குரிய இலவச பயிற்சிகள் அளிப்பது குறித்தும், ஆதரவற்ற பெண்களுக்கான சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்தும் , தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாதந்தோறும் நடைபெறுதல் குறித்தும் கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியமுடனும் செயல்பட வேண்டும் என்றும், வேலைக்கு சென்று அல்லது சுயதொழில் செய்து குடும்ப வருவாய் ஈட்டுதலில் கூடுதலான முனைப்புடன் அரசு நல திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாவட்ட மகளிர் அதிகார மையத்தை சார்ந்த பாலின வல்லுநர் ஜி. நவீன் செந்தூர் சமூக நலத்துறை சார்பான அரசு நல திட்டங்களை குறித்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்குரிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். ஒன் ஸ்டாப் சென்டர் மைய அலுவலர் கே பிரியங்கா, மையத்தின் சேவைகளை குறித்தும் 181 இலவச உதவி எண் குறித்தும், பெண்கள் குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சமூகப்பணி துறை தலைவர் டாக்டர்.கேத்ரின் ஜோசப் மற்றும் சமுதாய முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் அனிதா, மன அழுத்தங்களை இறுக்கங்களை போக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மன அழுத்தங்களை குறைத்தல் உடற்பயிற்சிகளையும், அணுகுமுறைகளையும் குறித்தும் பயிற்சி அளித்தார்.இதில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ,ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் டி .விஜயன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. தினகரன், கள ஒருங்கிணைப்பாளர் ஜே.பழனி ஆகியோர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.இறுதியாக குடும்ப ஆலோசகர் டி. யுவஸ்ரீ நன்றியுரை கூறினார்.

0Shares