நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
ஆறுகள், நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை உள்ளடக்கிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை திட மற்றும் திரவ கழிவுகளை கொட்டி மாசுபடுத்துவது பல்வேறு சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் மற்றும் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள நகர்புறம் மற்றும் ஊரக பகுதியில் உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்போர், தொழிற்சாலை உள்ளிட்டவர்கள் மற்றும் கழிவு நீர் சேகரிக்கும் ஊர்தி உரிமையாளர்களுக்கும், இயக்குபவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிப்பதாவது :
கூவம் மற்றும் கொசத்தலை ஆறுகளில் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்ட திரவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் அபராதம் விதித்தல், காவல்துறை மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்தல், பொது சுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குபதிவு செய்வது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என 03.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல முக்கிய இடங்களில், ஊராட்சிகளில் சென்னீர்குப்பம், பாரிவாக்கம், வானகரம், அடையாளம்பட்டு, விச்சூர், காரனோடை, சீமாவரம், கொண்டக்கரை, சுப்பாரெட்டிபாளையம், வெள்ளிவாயில் சாவடி ஆகிய ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திடக்கழிவுகளை ஊராட்சிகளில் மின்கல வண்டிகள் மூலம் “தூய்மைப்பாடல்” ஒலிக்க செய்து வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் தனித்தனியாக சேகரிக்க வரும் தூய்மை காவலரிடம் அளிக்குமாறும், திரவ கழிவுகளை கழிவுநீர் ஊர்தி இயக்குநர்கள் உள்ளாட்சிகளில் முறையாக பதிவு செய்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயலி (CMWSSB App) பதிவிறக்கம் செய்து திரவக்கழிவுகள் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கொண்டு சேர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆறுகள், நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.