டிரம்புக்கு எதிராக போராட்டம்: கலவரக்காடான லாஸ் ஏஞ்சல்..திணறும் பாதுகாப்பு வீரர்கள்!
லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.மேலும் தேசிய காவல்படை வீரர்களுக்கு உதவ சுமார் 700 கடற்படை வீரர்கள் லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வர்த்தக வரியை உயர்த்தியதுடன் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார். அப்படி சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியின்போது பல வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.
மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் கலவரத்தை
போலீசாரால் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவை நடத்தி ஏராளமானோரை கைது செய்து வருகிறார்கள். ஆனாலும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை.
லாஸ் ஏஞ்சல்சில் 4-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் கலவரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் தேசிய காவல்படை வீரர்களுக்கு உதவ சுமார் 700 கடற்படை வீரர்கள் லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.