சமூக சேவகர்களுக்கு சுதந்திர தின விருது..விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். சமூக சேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் தொண்டு நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்படி விருதினை பெறுவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் 12.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

மேற்படி இணையதள வழியாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேற்படி இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றிய புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் Booklet தயார் செய்து 15.06.2025 அன்று மாலை 5 மணிக்குள் “மாவட்ட சமூக நல அலுவலகம், 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர் – 600201 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares