16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி, 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த நான்கு ஆண்டு காலமாக மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருகிறது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளன.
ஆளும் கட்சியினரின் தலையீடு அதிக அளவில் இருப்பதால், நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் போடப்படும் சாலைகள் தரம் குறைந்து காணப்படுகிறது.மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால், சில இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.
நடுத்தர மக்களிடம் அதிக அளவில் வரிவசூல் செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 16.6.2025 திங்கட்கிழமை காலை 10 மணியாவில், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தலைமையிலும்; ரமணா முன்னிலையிலும் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.