வருவாய் தீர்வாயம் மூலம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்..மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்!
திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் 226 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வருவாய் தீர்வாய அலுவலர் மு.பிரதாப் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434-ம் வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் வருவாய் தீர்வாய அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் முன்னிலையில் 226 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி வட்டத்திற்குட்பட்ட 65 வருவாய் கிராமங்களுக்கான இந்த வருவாய் தீர்வாயம் என்பது பாரம்பரியமான விஷயமாக நடைபெற்று வருகிறது.வருவாய் என்று இல்லாமல் அனைத்து விதமான கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து தகுதியான பயனாளிகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த வருவாய் தீர்வாயம் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் 226 பயனாளிகள் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் பெற்று உள்ளார்கள். 20.5.25 முதல் 3.6.25 வரை நடைபெற்ற 1434. -ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தின் மூலம் 549 மனுக்கள் பெறப்பட்டு அதில் 306 மனுக்கள் தீர்வு காணப்பட்டும், நிலுவையில் உள்ள 243 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்படும் .
இன்றைய தினம் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கினாலும் மக்களுக்கு தேவையான பட்டா வழங்குவதுதான் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.கடந்த நான்காண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 63 ஆயிரம் நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டா என்பது உங்களது உரிமை நீண்ட காலமாக உங்க இடத்தை பாதுகாத்து இருப்பீர்கள் அதற்கான பட்டா தான். வருவாய் துறை மற்ற துறைகளை போல் முக்கியமான துறையாகும் ஏனென்றால் கடைக்கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற துறைகளில் ஒன்று வருவாய்த்துறை ஆகும் இத்துறைகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி முக்கியமான பணியாகும். ஆகவே எந்த ஒரு திட்டங்களும் ஆனாலும் மக்களை தேடி அரசாங்கம் செல்லும் வகையில் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி , அலுவலக மேலாளர் கமல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.