‘சாம்பார் சரி இல்லை’ என கணவர் தகராறு: மனைவி எடுத்த விபரீத முடிவு!
சாம்பார் சரி இல்லை’ எனகூறி கணவர் தகராறு செய்ததால் மனைவி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா விசுவநாதபுரா பகுதியை சேர்ந்த 38 வயதான பெண் நாகரத்னாவுக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சாப்பிடும்போது கணவர் மற்றும் குழந்தைகள், நாகரத்னா வைத்த சாம்பார் சுவையாக இல்லை என்று கூறிஇருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த நாகரத்னா கணவர், குழந்தைகள் தூங்கிய பின் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மின்விசிறியில் நாகரத்னா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தினர் இதுகுறித்து விசுநாதபுரா போலீசில் புகார் அளித்தனர்.அப்போது விரைந்து வந்த போலீசார் நாகரத்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோர் நாகரத்னாவிடம் சாம்பார் சுவையாக இல்லை என கூறி தகராறு செய்ததனால் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.
இந்தநிலையில் நாகரத்னாவின் பெற்றோர், தங்களது மகளை அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், நாகரத்னாவை அவரது கணவர் கொலை செய்து தூக்கில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.