கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை அடித்துக்கொன்ற பெரியப்பா!
விருதுநகர் அருகே கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை பெரியப்பா அடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் கார்த்திக். இவர்களது வீட்டின் அருகே லட்சுமணனின் அண்ணன் ராமர் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். லட்சுமணனும், அவருடைய மனைவியும் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் கார்த்திக் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிேசாதனையில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதன் பேரில் சிறுவனின் பெரியப்பாவான ராமரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-ராமருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சம்பவத்தன்று அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரச்சொல்வதற்காக கார்த்திக்கிடம் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவன் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராமர், சிறுவன் கார்த்திக்கை அடித்து உதைத்து கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளி உள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் கார்த்திக் இறந்த பின்பு சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுகி அவன் இறந்ததாக மற்றவர்களை நம்ப வைக்க முயற்சித்தது தெரியவந்தது என இவ்வாறு போலீசார் கூறினர்.