பள்ளி வளாகத்த்தில் ஆரம்ப சுகாதார நிலையம்..கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!
பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்த்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை தொடங்க விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த, 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பேரம்பாக்கத்திலிருந்து 20 கி.மீ., துாரத்திற்கு அரசு மருத்துவமனை இல்லாததால் பேரம்பாக்கத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் இந்த மருத்துவமனையில் தினமும், ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 50 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், எக்ஸ்-ரே மற்றும் உள் நோயாளிகள் பிரிவு என, அனைத்து பிரிவுகளும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டடங்களை இடித்து விட்டு புதிய மருத்துவமனை கட்ட தமிழக அரசு ரூ. 2 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் சுகாதாரத்துறையினர் புதிய மருத்துவமனை கட்டுவுதற்கு இடம் தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாயத்துறையினர் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி உட்பட இரு இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இது அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீர்நிலை புறம்போக்கில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளி அமைந்துள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனையும் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெறாத நிலையில் நேற்று மீண்டும் பணிகள் தொடங்கியது.
இதை அறிந்த திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தை ஈடுபட கூடாது என்றும், முறையான அனுமதியோடு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து வந்து செல்வதால் மருத்துவமனை வளாகத்திற்குள் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் மருத்துவமனைய வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பள்ளி வளாகத்திற்குள் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டால் ஊர் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.