திமுக இரட்டை வேடம் போடுகிறது..அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி முதலமைச்சர் நிதி ஆயுக் கூட்டத்தை ஏன் புறக்கணித்தார் என விளக்கமளிக்க வேண்டும் என புதுச்சேரி திமுக அமைப்பாளர் கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லைதமிழகத்தில் ஒரு நிலைபாடு, புதுச்சேரியில் ஒரு நிலைபாடு என்ற திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுவதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
புதுச்சேரி மாநில கட்சியின் வளர்ச்சி குறித்து மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் :1
பிரதமர் தலைமையில் கூட்டப்படும் நிதி ஆயுக் கூட்டத்தை கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித காரணமும் இன்றி அற்ப அரசியலுக்காக தமிழக விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சராக உள்ள திரு.ஸ்டாலின் அவர்கள் புறக்கணித்து வந்தார். தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள கர்நாடகா காங்கிரஸ் முதல்வர், கேரளா கம்யூனிஸ்ட் முதல்வர், மேற்குவங்க முதல்வர் உள்ளிட்டோரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் ஆகிய 5 மாநில முதல்வர்கள் நிதி ஆயுக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக திமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் சம்பந்தமானஅமைச்சர்கள் மீதான விசாரணைகள் மற்றும் டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து அமலாக்கத்துறையின், தனது குடும்ப உறுப்பினர்கள் வரையிலான விசாரணைகள் என இவை அனைத்திலும் இருந்து மத்திய அரசிடம் சமரசம் ஏற்படுத்தி தப்பித்துக்கொள்வதற்காக எப்போதும் இல்லாத நிலையில் நிதி ஆயுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டிருப்பது கடைந்தெடுத்த பொய்யான நாடகத்தனமான அரசியல் நிலைபாடு என்பதை சுட்டிக்காட்டி எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் குற்றச்சாட்டை தைரியத்துடன் திராணியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏதிர்கொள்ள முன் வர வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் வெளியிடும் பசப்பு காரணங்களை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் :2
புதுச்சேரியில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 650 மருத்துவ இடங்ககளில் அரசுக்கு சேர வேண்டிய சட்டப்படியான 50 சதவீதமான 325 மருத்துவ இடங்களை புதுச்சேரி மாநில மாணவர்களின் நலன் கருதி துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் இணைந்து இந்த ஆண்டே தனியார் மருத்துவகல்லூரிகளிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :3
அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் அரசு இடஒதுக்கீட்டில் இலவச கல்வி பயிலும் நிலை உள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போன்று புதுச்சேரியிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 10 சதவீதம் இடம் கொடுக்கப்படும் என்ற அரசாணையை புதுச்சேரி அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இக்குழு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :4
மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்தபடி,தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் மீனவ சமுதாய பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை அரசாணையில் வெளியிட்டு, உடனடியாக இந்த கல்வியாண்டு முதலே அமுல்படுத்த வேண்டும் என இக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 5
தனியார் பள்ளி மற்றும் உயர் கல்வியில் அட்டவணை இனத்தவருக்கு அரசால் வழங்கப்படும் கல்வி கட்டணம் போன்று சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் உயர் கல்வியில் முழு கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்த உரிய அரசாணியை வெளியிட வேண்டுமென இக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6
நாடுமுழுவதும் குருப்-சி பணியிடங்களில் மாநில அந்தஸ்து உள்ள பல்வேறு மாநிலங்களில் பொதுப்பிரிவில் 33 வயது, 35 வயது, 42 வயது எனவும், யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் குருப்-சி பணியிட தேர்வுக்கு வயது வரம்பு 33 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை கணக்கில் கொண்டு குருப்-சி பணியிடத்திற்கு பொதுப்பிரிவில் 35 வயதாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என இக்குழு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 7
பிரதமர் தலைமையில் கூட்டப்பட்ட நிதி ஆயுக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் கலந்து கொள்ளாதது தவறு என அதிமுக கருதுகிறது. புதுச்சேரி மாநில உரிமைகளான மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்காதது, நீண்டகால கடன்களை தள்ளுபடி செய்வது, மத்திய கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பிலும், மத்திய கல்வி அமைப்புகளில் அனைத்து பாடங்களிலும் 25 சதவீதமான இடஒதுக்கீடு வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர், குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோர்களிடம் பலமுறை புதுச்சேரி முதல்வர் கோரிக்கை வைத்தும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை புதுச்சேரி திமுக அமைப்பாளர் புரிந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயுக் கூட்டத்தை தமிழக திமுக அரசு புறக்கணித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நிதி ஆயுக் கூட்டத்தை ஏன் புறக்கணித்தார் என விளக்கமளிக்க வேண்டும் என புதுச்சேரி திமுக அமைப்பாளர் கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை
தமிழகத்தில் ஒரு நிலைபாடு, புதுச்சேரியில் ஒரு நிலைபாடு என்ற திமுகவின் இரட்டை வேடத்தை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் : 8
புதுச்சேரியில் மாநிலத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர் குலைவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகையால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருவதை தடுக்க மாண்புமிகு
முதல்வரும், துணை நிலை ஆளுநர் அவர்களும் உரிய சமூக சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அதே போல் சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் சாலைகளில் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு அறிவித்தபடி கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானம் அருகேயும், ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரையிலான மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குழு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 9
நாடுமுழுவதும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அதிக அளவில் வருகின்றனர். அந்த மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. எனவே நமது மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் கொரானா குறித்து முன்னேற்றத்திற்கு நடவடிக்கை அரசு போர்க்கள அடிப்படையில் செய்ய வேண்டும் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய வழிவகை செய்ய இக்குழு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.