தொகுதி மக்களுக்கு இலவச மனை பட்டா.. அதிகாரிகளுடன் MLA அனிபால் கென்னடி ஆலோசனை!

Loading

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் உள்ள ஆட்டுப்பட்டி, நேதாஜி நகர் வெங்காயத்தோப்பு மற்றும் ரோடியர்ப்பேட் பகுதிகளில் வாழும் ஏழை மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் முயற்சியில், உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வலியுறுத்தி போராடி துரிய முயற்சியால் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் நில உரிமை பெறும் உறுதிமொழியை பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் சிறப்புக் கூறு நிதி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவனை எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க, அரசே நேரடியாக நிலங்களை கைப்பற்ற வேண்டும் என்றும், உரிமையாளர்களுக்கு மாற்றாக நிலம் வழங்க இயலாவிட்டால், நிதி வழங்கும் ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் உறுதியையும் தெரிவித்தார். இது பல ஆண்டுகளாக நில உரிமைக்காக காத்திருந்த மக்களுக்கு ஒரு பெரும் நிம்மதியாக அமையும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தெரிவித்தார்.

0Shares