வயலூரில் சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் மீண்டும் பழுதடைந்தது.. சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை!
வயலூரில் ரூ.1.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கிளை நுாலகம் பழுதடைந்த புத்தகங்கள், இருக்கை வசதிகள், நூலகர் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிளை நூலகம் அமைக்கப்பட்டது. பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த இந்த கிளை நூலகம் கடந்த 2022ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கப்பட்டது. இந்த நூலகம் சீரமைக்கப்பட்டு மூன்றாண்டுகளாகியும் நூலகர் மற்றும் புத்தகங்கள் இல்லாததால் நூலக வாசகர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் கிளை நூலகத்தில் உள்ள சில புத்தகங்களும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மேலும் வாசகர்கள் அமர சேர், டேபிள் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நூலகத்தை புத்தகங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வயலுார் நூலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.