கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியை காண 2-வது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.
அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.
நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி, சுகினி, கோவைக்காய், பச்சை-சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் ஆன தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் ஆன நீலகிரி வரையாடு போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது.
மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.
அதுவும்தவிர திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெ ற்று உள்ளன. அவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
காய்கறி கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.