ஆன்லைன் ரம்மி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடைவிதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது.
இதன்படி, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடக்கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.