பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.
அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா பங்குனி உத்திரத்தன்று தான் அவதரித்தார். இதனால் தான் பங்குனி உத்திரத்தன்று தென்மாவட்ட மக்கள், தங்களின் குலதெய்வமான சாஸ்தாவை வழிபட்டு வருகிறார்கள்.
குலதெய்வத்தை வழிபடுவதால் நமக்கு முன்னோர்களின் ஆசியும், ஆண்டவனின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சாப விமோசனம், திருமண தடை நீங்கும். மனதில் நினைத்த காரியம் நடக்கும். இந்த சாஸ்தா கோவில்கள் பெரும்பாலும் கிராம பகுதியிலும், காட்டு பகுதியிலும், குளக்கரையிலும் தான் அதிகம் இருக்கின்றன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.
கோவிலில் சாஸ்தா அதாவது அய்யனார், பூரண, புஷ்கலை என்ற தேவியரோடு காட்சி தருவார். சாஸ்தாவுக்கு பிரதான காவல் தெய்வமான கருப்பசாமி எதிரே குதிரை வாகனத்துடன் காட்சி தருவார். அவருக்கு அருகில் சுடலைமாடசாமி, சங்கிலி பூதத்தார், அக்கினி மாடசாமி, உதிரமாடசாமி, தளவாய் மாடசாமி, சப்பாணி மாடசாமி, தூண்டில் மாடசாமி, கரடி மாடசாமி, முண்டசாமி, பேச்சி, பிரம்மராட்சி, சிவனனைந்தபெருமாள், காலசாமி, வன்னிய ராஜா, வன்னியதலைவி, கழுமாடசாமி, முன்னாடிமாடசாமி, புதியவன்சாமி, பட்டவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இருக்கும்.
பங்குனி உத்திர திருவிழா நாளை (வெள்ளிகிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் பொங்கலிட்டு, சைவபடப்பு போட்டு வழிபடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கலிட்டு கிடா வெட்டி அசைவ படப்பு போட்டு வழிபாடு நடத்துவார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அருச்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், புலுடையார் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா மற்றும் நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்கசாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில், தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கைக்கொண்டார்சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூசண பெருமாள் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
இதையொட்டி சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவில்களில் சுத்தம் செய்து பந்தல் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு வரை சிறப்பு பூஜைகளும், அன்னதானங்களும் நடக்கிறது. பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்று (வியாழக்கிழமை) பகல் 2.06 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் பிறந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.11 மணி வரை உள்ளது. இதனால் இன்று இரவில் பங்குனி உத்திரம் இருப்பதால் சில சாஸ்தா கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) இரவில் பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது. இரவில் சாஸ்தாவுக்கும் காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது. நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மாலையில் செங்கோல் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.