மிலன் 2025 பிரம்மாண்ட கலை விழா துவக்கம் ..நடிகர் அதர்வா முரளி பங்கேற்பு!
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 17-வது வருடாந்திர கலை நிகழ்வு – மிலன் 2025-ன் பிரம்மாண்ட துவக்க விழா நடைபெற்றது.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SRMIST) தனி முத்திரை பதித்த கலைத் திருவிழாவான மிலன் 2025, அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் பங்கேற்புடன் மிகச்சிறப்பாக தொடங்கியிருக்கிறது. கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்களின் கொண்டாட்டமாக இவ்விழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. பிரபல திரைப்பட நடிகர் அதர்வா முரளி இக்கலை விழாவின் தொடக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார். தனது உரையில் மாணவர்களின் உற்சாகத்தையும் இந்த கலைத் திருவிழாவின் துடிப்பான ஆற்றலையும் அவர் வெகுவாக பாராட்டினார்.
“கலை மற்றும் நடனத்தின் மூலம் பன்முகத்தன்மையை கொண்டாடுங்கள்: பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் சந்திப்பு” என்ற கருப்பொருளுடன் நடைபெறும் கலைவிழாவான மிலன் 2025, நாடு முழுவதிலுமிருந்து சுமார் 50,000 மாணவர்களை கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் கலை வெளிப்பாட்டின் கொண்டாட்டத்தில் ஒன்றிணைத்திருக்கிறது.
இந்த பிரம்மாண்ட கலைவிழாவில் 40-க்கும் மேற்பட்ட மன்ற (கிளப்) நிகழ்வுகளும், இரண்டு பிரமாதமான தொழில்முறை கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும். ரூ. 8 லட்சத்திற்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்படும் இவ்விழா, ஆயிரக்கணக்கான திறமையான பங்கேற்பாளர்களை ஒவ்வொரு ஆண்டும் ஈர்க்கிறது.
மிலன் 25 என்ற இக்கலை விழாவின் தொடக்க நிகழ்வில், எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர். டி. ஆர். பாரிவேந்தர் பங்கேற்று உரையாற்றினார். “பன்முகத்தன்மையும், பல்வேறு திறன்களும் கொண்ட முழுமையான குடிமக்களை உருவாக்குவதற்கு கல்வித் திறனுக்கும் கூடுதலாக பல்வேறு திறன்கள் அதிகமாக தேவை என்பதை நாட்டின் மிகப்பெரிய பல்துறை பல்கலைக்கழகங்களில் ஒன்றான எஸ்ஆர்எம் நன்கு உணர்ந்திருக்கிறது. மாணவர்கள் பல பரிமாணங்களும், தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட தலைவர்களாக வளர்வதற்கு கலாச்சார மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகள் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்..