தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்..MLA வைத்தியநாதன் கோரிக்கை!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது போன்று புதுச்சேரி மாநிலத்திலும் இது போன்ற ஒரு முறை வாய்ப்பு (GRACE CHANCE) வழங்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்ட பேரவையில் இன்று பூஜ்ய நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்கள் பேசியதாவது. தொழில்நுட்ப கல்வி, பலவகை தொழில்நுட்பக்கல்வி, பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்வு எழுதுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை முடித்து அந்த வாய்ப்புகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்கள் (ARREARS) வைத்துள்ளவர்களுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் ஒரு அரசாணை வெளியிட்டு வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது.
இதே போல நமது புதுச்சேரியிலும் வழங்க வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக்கல்வி முடித்த நிறைய மாணவர்கள் நிலுவை பாடங்கள் அதாவது ARREARS வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு இதுபோல சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களும் அவர்களின் குடும்பத்தின் பட்டப்படிப்பு கனவும் நிறைவேறும்,
எனவே தமிழகத்தில் வெளியிட்டுள்ள அரசாணையை அடிப்படையாக கொண்டு நமது புதுச்சேரி மாநிலத்திலும் இது போன்ற ஒரு முறை வாய்ப்பு (GRACE CHANCE) வழங்க வேண்டுமென மாணவர்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல அரசு துறையில் பணிபுரிந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து, மிரட்டும் ஊழியர்கள் மீது குண்டர் சட்டம் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ( குறிப்பாக உள வாய்க்கால் சந்திரசேகர், போராளி சுந்தர்) மேலும் சிலர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் கோரிக்கை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து விவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு மிரட்டல் விடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கோரிக்கை வைத்துள்ளார்.