புதுச்சேரிக்கு நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவு? வைத்திலிங்கம் எம்.பி கேள்வி!
புதுச்சேரிக்கு நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் 2025-26க்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்றும் வைத்திலிங்கம எம்.பி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் திரு. நித்தின் கட்கரி பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பேசியது :(அ) மத்திய அரசு புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சந்திப்பில் இருந்து மரப்பாலம் சந்திப்பு வரையிலும் மற்றும் மரப்பாலம் சந்திப்பிலிருந்து கடலூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசலை பற்றி அறியுமா ஆமெனில் விவரம் என்ன?
மேலும் (ஆ) இந்த போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட திட்டங்கள் யாவை?
(இ) மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மற்றும் அனுமதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவை எனவும்
(ஈ) மேலும் 2024-25 நிதி ஆண்டில் புதுச்சேரிக்கு நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி எவ்வளவு என்றும் 2025-26க்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்றும் வைத்திலிங்கம எழுப்பினார்.
அப்போது மேற்கண்ட கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நித்தின் கட்கரி அவர்கள் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
(அ) புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை மத்திய அரசு அறியும்.
(ஆ) மற்றும் (இ). தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான மற்றும் இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரதம மந்திரி கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் படி முன்னுரிமை அடிப்படையிலும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் புதுச்சேரியில் மூன்று திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 1. ராஜீவ் காந்தி சதுக்கம் மற்றும் இந்திரா காந்தி சதுக்கம் உள்ளடக்கிய சாலையை மேம்படுத்துவது, 2. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் 20 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், 3. ராஜீவ் காந்தி சதுக்கத்திலிருந்து மரக்காணம் மார்க்கமாக செல்லும் 13 கிலோமீட்டர் நீளமுள்ள கிழக்குக் கடற்கரை சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தல்.
(ஈ) 2024-2025 நிதியாண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கும் பணிகளுக்கு ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025-26 நிதி ஆண்டில் புதுச்சேரி அரசுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு செய்வதற்கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்வதை மத்திய அரசு உறுதி செய்யும் என கூறினார்.